நகை மோசடி தனியார் வங்கி ஊழியர் கைது

            தங்க நாணயம் வாங்கித் தருவதாக கூறி, தீபாவளி சீட்டு நடத்துபவரிடம் மோசடியில் ஈடுபட்டதாக தனியார் வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த உஷா, தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் தான் நடத்தி வரும் தீபாவளி பரிசுச் சீட்டு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் தருவதற்காக, உஷாவிடம் 20 லட்சம் ரூபாய் தந்ததாக கூறப்படுகிறது. இதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா என்பவரிடமும், தங்க நாணயம் வாங்கித் தருவதாகக் கூறி, 35 சவரன் நகையையும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் உஷா பெற்றதாக கூறப்படுகிறது. தங்க நாணயங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, மீனாட்சி மற்றும் கலா, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மோசடியில் ஈடுபட்டதாக உஷாவை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.